Saturday 31 May 2014

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசு!

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசு!
மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 18 – ‘ ஏமாற்றாதே .... ! ஏமாறாதே .... !! 
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
இரண்டாம் பரிசு
 கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! இது நான் பெறும் ஐந்தாம் பரிசாகும்! வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும் எனது விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்!
VGK 18 – ‘ ஏமாற்றாதே .... ! ஏமாறாதே .... !! 
சிறுகதைக்கான இணைப்பு இதோ
பரிசறிவிப்புடன் எனது விமர்சனம் வெளியான இணைப்பு இதோ

Saturday 24 May 2014

‘கடந்த’ காலம்!

‘கடந்த’ காலம்!
இரு கரை தொட்டு ஓடியிருந்த
கவினுறு காவிரி ஆறு
தரை தட்டி காய்ந்ததென்ன!?
சுழித்தோடிய ஆற்றினூடே
கோபுரமேறி குதித்த தடம்;
இன்றோ காய்ந்து போன-
ஒரு கிரிக்கெட் மைதானம்!
காலங்கள் பல கடந்தும்
ஊர் செழிக்க ஓடியிருந்தது….
இன்றோ உலரும் நிலைவந்து-
‘கடந்த காலம்’ ஆகிப்போனது!
இளைஞர் மனம் மகிழ இங்கே
கையில் கிரிக்கெட் பேட்டோடு!
இன்றைய உன் நிலையோ
காலம் செய்த விளையாட்டு!
ரவிஜி … (ஆதங்கத்துடன்)
(புகைப்படம் : ரவிஜி…)

(இடம் : காவிரி ஆற்றுப் படித்துறை, மயிலாடுதுறை)

VGK அவர்களின் ‘ஜாதிப்பூ’சிறுகதை விமர்சனப் போட்டியில் சரிசமமான பரிசு!

VGK அவர்களின் ஜாதிப்பூசிறுகதை விமர்சனப் போட்டியில் சரிசமமான பரிசு!
மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 16 – ‘ஜாதிப்பூ’
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
சரிசமமான பரிசு
 கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! இது நான் பெறும் நான்காவது தொடர் பரிசாகும்! வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும் எனது விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்!

ஜாதிப்பூ’ சிறுகதைக்கான இணைப்பு:

சம பரிசுபெற்றதனை அறிவிக்கும்  இணைப்பு:

விமர்சனம் வெளியிடப்பட்டுள்ள இணைப்பு:
http://gopu1949.blogspot.in/
நான்காம் முறையாக எனக்கு தொடர்வெற்றி கிடைத்ததற்கான அறிவிப்பு
கதைக்கான எனது விமர்சனம் இதோ:
“ பூக்களை விட… அந்தப்பூக்காரி… நல்ல அழகு!பதினாறுக்கு மேல் பதினெட்டு தாண்டாத பருவப்பெண்” என்று கதை ஒரு ‘யூத் டச்’ உடன் ஒரு சினிமாவின் துவக்கக் காட்சி போல் ஆரம்பிக்கிறது. பூக்களே அழகு. அதிலும் பூ விற்கும் அழகிய பெண்ணென்றால்…!
பூ வியாபரத்திற் கேற்றவாறு இரட்டைப் பின்னல்கள்பாவாடை சட்டை தாவணிபளிச்சென்ற தோற்றம்படித்த பெண்ணாக தோற்றமளிக்கும் இவள் பூ வியாபாரத்திற்கு புதியவளா என்ற ஒரு கேள்விக் குறி! 
அந்தக்கோயில் வாசலில் ஏற்கனவே பூ விற்றுவந்த கிழவியின் வியாபாரம்இந்தப் புதுப் பெண்ணின்வருகையால் கடந்த ஒருவார காலமாகப்படுத்துப் போனது.  அழகான பெண் என்றால் பூ வாங்க கூட்டம் வருவதும், பக்தி வேடமிட்டாவது அவளைக் கவர்ந்திட நினைப்பதும் சகஜமென்றாலும் தன்னுடைய சாமர்த்தியமான பேச்சால் வழிசல் பேர்வழிகளையும், ஜொள்ளர்களையும் சாமர்த்தியமாக சமாளித்து முழுகவனத்தையும் செலுத்தி பூக்கூடையைக் காலி செய்துவிட்டு, கை நிறைய காசுடன் ‘வரட்டுமா பாட்டி?’ என்று கேட்டுச் செல்கிறாள்!
            அந்த பூ வியாபாரத்திற்கு சீனியரான பாட்டியோ கோபம் ஏதுமின்றி, போட்டியோ அல்லது பொறாமையோ கூட இல்லாது, ஜாக்கிரதையாப் பார்த்துப் போம்மா கண்ணு” என்கிறாள் வாஞ்சையுடன்! ஏன்?
        இந்த இடத்தில், அந்த இளம் பெண் யார், பாட்டிக்கு என்ன உறவு என்று கீற்றாக ஒரு சந்தேகம் கலந்த கேள்வி வாசகனுக்கு எழுகிறது! 
      அந்தப்பெண் யார், அவள் பெயரென்ன, எந்த ஊர், எங்கே தங்கி இருக்கிறாள் என்று பலரும் எழுப்பும் சந்தேகத்திற்கு, ‘என் பிழைப்பைக் கெடுக்க வந்தவள், வேறொன்றும் தெரியாது! இனிமேல் அது வெள்ளி செவ்வாய் மட்டும்தான் வருமாம்!’ என்று சொல்லி ஜொள்ளர்களின் சூடான நெஞ்சங்களில் தண்ணீரை ஊற்றி அணைக்கிறாள்! அவளுக்கென்ன அக்கறை?
      மற்றவர்களெல்லாம், பேசாமல் சென்றுவிட அந்த இளைஞன் மட்டும் கிழவியின் காதில் ”செவ்வாய் வெள்ளியும் கூட இங்கு வரவேண்டாம்னு கண்டிச்சு சொல்லிடுங்க” என்று சொல்கிறான். அந்தப்பெண்மீது அவனுக்கென்ன அக்கறை? இதை ரகசியமாகச் சொல்லுமளவிற்கு, பூக்கார பாட்டியுடன் என்ன உறவு? இவ்வாறு அடுத்தடுத்த கேள்விகளை எழுப்பிவிட்டு, அவற்றுக்கு பதில் சொல்வதுபோல் கதை நகர்கிறது! பல வண்ணப்பூக்களை ஒரு நூலோ அல்லது நாரோ இணைப்பதனைப்போல சின்னச் சின்ன வண்ணமயமான காட்சிகளை திரைக்கதை பாணியில் கோர்த்துச் சென்றிருப்பது அருமையான உத்தி!
      அந்த இளைஞன் உண்மையிலேயே கடவுள் பக்தி உள்ளவன்; தினம் தவறாமல் கோயிலுக்கு வருபவன்; கிழவிக்கு அவனது சின்னவயது முதலாகவே பழக்கமுண்டு என்பதும் அவனை அவள் ‘பேராண்டி’ என்று செல்லமாக அழைக்கும் அளவிற்கு பழக்கமென்பதும் முதலில் கோடிட்டுக்காட்டப் படுகிறது.  பூக்காரக் கிழவி உடல் நலமின்றி இருந்த பொழுது, மழையில் நனையாமல் குடையுடன் பத்திரமாக வீட்டிற்குக் கொண்டு போய்விட்டது இங்கே தெரியப்படுத்தப்படுகிறது. தள்ளாத வயதிலும் பூவிற்று தன் உழைப்பில் உயிர்வாழும் கிழவிமேல் அவனுக்கு ஒரு தனி பிரியம். கோயிலுக்குப்போய் ஸ்வாமி கும்பிட்டு விட்டு திரும்ப வீட்டுக்குப் போகும்முன் இந்தக் கிழவியிடம் ஒரு பத்து நிமிடங்களாவது தினமும் பேசி விட்டுத் தான் போவான்.
அந்த நட்புறவு அவனது சிறுவயதில் பூக்களின் பெயர்களைத் தெரிந்துகொள்வதில் துவங்கி வளர்ந்தது!  பூக்களிலே ‘ஜாதிப்பூ’ என்ற ஒன்று இருப்பதை அறிந்து ‘பூக்களிலும் தனியாக ஒரு ஜாதியா?’ என்று கேள்வியெழுப்புவதான அவனது பாத்திரப்படைப்பு அவனுக்கு ஜாதி வித்யாசங்கள் சிறுவயதிலிருந்தே இல்லை என்பதனை அறிவுறுத்துகிறது! அவன் பள்ளியில் முதல் ரேங்க் வாங்கியது, கல்லூரியில் படித்து உள்ளூர் பேங்க் ஒன்றில் நல்ல சம்பளத்தில் பணிபுரிவது வரை அவ்வப்பொழுது பகிர்ந்துகொண்டு பாட்டியின் வாழ்த்துக்களையும் பெற்று வந்துள்ளான். இவை எல்லாமே பாட்டிக்கும் ‘பேரனு’க்கும் உள்ள ஆழ்ந்த நட்புணர்வினை தெளிவுபடக் கூறுவதாக இருக்கிறது.
ஜாதி வித்தியாசம் பார்க்க விரும்பாத அந்தப்பையன் தான் பெண் வீட்டிற்கு எந்த செலவும் வைக்காமல் திருமணம் செய்துகொள்ள விரும்பிடும் அந்த இளம் பூக்கார அழகுப்பெண்ணை பொது இடத்தில் மற்றவர் பார்த்து ஜொள்ளு விடுவதை சகியாமல் பாட்டியிடம் விருப்பத்தைத் தெரிவித்து அது நிறைவேற அசீர்வதிக்கும்படியாக வேண்டுகிறான். பாட்டியிடம் வேண்டியது அம்பாளிடமே வேண்டியதுபோல நல்ல சகுனமாய் கோயில் மணிஅடித்து அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
இங்கே ஒட்டுமொத்த கதைசுருக்கமும் ஏறக்குறைய தரப்பட்டுவிடுகிறது.  உயர்நிலைப் பள்ளிப்படிப்புத் தேர்வு முடிந்துலீவுக்கு பூக்காரப்பாட்டியின் வீட்டுக்கு வந்துள்ள பேத்திஜாலிக்காக அவளுக்கே போட்டியாக ஒரு மாதம் மட்டும் பூ வியாபாரம் செய்யப்போவதோடு தான் யார் என்பதை எவருக்கும் சொல்லக்கூடாது என்று நிபந்தனை போட்டிருக்கிறாள்!
            அதன்பிறகான பிளாஷ்பேக் நிகழ்வே இதுவரையிலான கதை!
      பழம் நழுவிப் பாலில் விழுவதைப்போல, நன்றாகப் படித்து, நல்ல வேலையிலுள்ள, பாசத்தோடு, கடவுள் பக்தியோடு, நற்குணங்களும் பொருந்திய, சிறுவயதுமுதலே தான் நன்கு அறிந்த பையனே விளையாட்டாக பூவிற்க வந்த தனது பேத்திக்கு பூச்சூடி மணமகளாக ஆக்கிக்கொள்ள விரும்புவதை அம்பாளின் அனுக்கிரஹமாகவே எண்ணி சந்தோஷத்தில் பூரித்து பூத்துக் குலுங்குகிறாள் பூக்கார பாட்டி!
      அந்த அம்பாளே பேசுவதுபோல தனது முடிவாக சஸ்பென்ஸையும் உடைப்பதுபோல “எல்லாம் உன் மனசுப்படியே நல்லபடியாகவே நடக்கும்டா மாப்ளே’ என்கிறாள் அந்தப்பாட்டி.  அப்பொழுதே தனது பேத்தியை அவனுக்குக் கட்டிவைக்க முடிவு செய்திருப்பதனை மறைமுகமாகத் தெரிவிக்கிறாள். 
முதலில் நல்ல சகுனமென ஒலித்த கோயில் மணி, பாட்டி ‘மாப்ளே’ என்றழைக்கும்பொழுது சிம்பாலிக்காக  மேளதாள’த்துடன் கோயில்மணி ஒலிக்கிறது.  பாட்டியாக மனோரமா ஆச்சி, ‘பேத்தி’யாக தமன்னா, ‘பேரனாக’ இருந்து மாப்பிள்ளையாக இருக்கும் பாத்திரத்தில் சூர்யா என்பதான ஒரு காட்சி நமது மனக்கண்ணில் விரிகிறது.
மணக்கும் ‘ஜாதிப்பூ’ விற்கும் அவனது மனங்கவர்ந்த அழகிய பெண்ணேயே அவன் மணந்து  ‘பெண்ஜாதி’ஆகும் குறியீடான சுபநிகழ்வுடன்…’சுபம்’. எளிமையே வலிமை என்பதுபோல் அருமையான எளிமையான நடை! கதை முழுவதுமே இழையோடும் ஒரு பாஸிடிவ் அப்ரோச் வாசிக்கும் நமக்கு ‘சுகம்’. திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன” என்பார்கள்! இங்கோ சொர்கத்தின் வாசலான  கோயில் ஒன்றின் வாசலில் நிச்சயிக்கப்படுகிறது! ‘பேத்தி’யும் ‘மாப்பிள்ளையும்’ பேசுவது போன்ற சிறிய நிகழ்வு ஏதாவது ஒரு இடத்தில் அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்! ‘புதுமணமக்கள்’ நீடூடி வாழ அந்த  அம்பாள் அனுக்ரஹம் பெற நாமும் வேண்டுவோம்!
நன்றி!

Sunday 18 May 2014

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் முதல் பரிசு!

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் முதல் பரிசு!

மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 15 – ‘ ழை ப் பு’
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
முதன் முதலாக
முதல் பரிசு
 கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! இது நான் பெறும் மூன்றாம் பரிசாகும்! எனது விமர்சனங்களைப் படித்து கருத்திட்டு, வாழ்த்திவரும் வலைப்பூ சகோதர சகோதரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும் எனது விமர்சனத்தை முதல் பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் ஐயா அவர்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்
‘அழைப்பு’ சிறுகதைக்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/04/vgk-15.html
முதல் பரிசுபெற்றதனை அறிவிக்கும்  இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/05/vgk-15-01-03-first-prize-winners.html#comment-form
ஹாட்ரிக் பரிசு வென்றதனை அறிவிக்கும் இணைப்பு:
என்னுடைய விமர்சனம் இதோ இங்கே!:

அழைப்பு’ என்ற தலைப்பே எதற்கான அழைப்பு? யாருக்கான அழைப்பு என்ற கேள்விகளை நமக்குள் ஏழுப்பி கதைக்குள் முதலில் நம்மை ‘அழைக்கிறது’.
அடுத்த வரியிலேயே கல்யாணத்திற்கான ‘அழைப்பு’தான் என்று நமக்குத்தெரியப்படுத்தி ஒரு சுவாரசியம் கூட்டுகிறது.
“வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்” என்ற பழமொழி பலவித வசதிகளும் வந்துவிட்ட இக்காலத்தில் ஏறக்குறைய பழைய மொழி ஆகி, திருமண கான்ட்ராக்டர்கள் பந்தல்போடுவது முதல் கட்டு சோறு கொடுத்து மணமக்களை வழியனுப்புவதுவரை எல்லாவற்றையும் முறையாக செய்துகொடுக்கும் நிலை இருந்தாலும் கூட அழைப்பிதழ் அடித்து அதனை வினியோகித்து திருமணத்திற்கு ‘அழைப்பு  விடுப்பது எந்த அளவிற்கு சிரமம் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகள் என்ன இவையே கதையின் கரு.

       மகனுக்குத் திருமணம் செய்பவர்கள் பெரும்பாலும் அறுபதைக் கடந்தவர்கள் என்பதால் உடல் உபாதைகள் படுத்துவதும், மன அமைதிநாடி கோயிலுக்கு செல்வதனை வழக்கமாகக் கொண்டிருப்பதும் யதார்த்தமான ஒன்று. அவ்வாறு கோயிலில் அமர்ந்து தினசரி அனுபவங்களை நண்பருடன் பகிர்ந்துகொள்வது கதை நகரும் முக்கியக் களமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வெளியூரிலிருப்பவர்களுக்கு ரயில் டிக்கெட் பதிவு செய்திட ஏதுவாக முன்கூட்டியே அழைப்பிதழ்கள் அனுப்பி அவற்றை பட்டியலில் குறித்துக் கொள்ளும் அளவிற்கு முறையாகச்செய்தபோதிலும் உள்ளூரில் உள்ள நண்பர்களையும், உறவினர்களையும் நேரில் சென்று அழைப்பதில் உள்ள சிரமங்களே திரைக்கதைபோல சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளூரில் உள்ளவர்களுக்கு கொடுக்கவேண்டிய அழைப்பிதழ்களை எட்டுதிசைகள் வாரியாக அடுக்கிக்கொண்டு அதன் வினியோகிக்கத் தயாராகின்ற கட்டத்தில்தான் கதை சூடுபிடிக்கத்துவங்குகிறது.
முதலில் கிளம்பும் படலம். மணமகனின் அம்மா காபி, டிபன், டிவி சீரியல் முடித்து கிளம்ப நான்கு மணியாவதும், கிளம்பிய பின்னரும் டிராஃபிக் ஜாம், ஒன்வே, சிக்னலில் நிற்பது, ஏறக்குறைய ஒரேமாதிரியான பேரில் அடுக்குமாடிக்கட்டிடங்கள், அவற்றில் லிஃப்ட் இல்லாதது, இருந்தாலும் மின்வெட்டு மற்றும் இதர ரிப்பேர்களால் இயங்காதது, சுப்ரமணியன் போன்ற பொதுவான பெயர்களில் பலர் இருப்பதால் ஏற்படும் குழப்பங்கள், வாட்ச்மேன்களின் கெடுபிடிகள், நாய்த்தொல்லைகள், பூட்டியிருக்கும் வீடுகள்,… இத்யாதி…இத்யாதி…அப்பப்பா எத்தனை இடர்கள். நிச்சயம் வாசகர் ஒவ்வொருவருக்கும் இதுபோன்ற சூழ்நிலையில் தாம் பட்ட சிரமங்களை இக்கதை கண்முன்னே நிறுத்தும். (ஆட்டோவில் செல்லும் நிலைமூலம் நடுத்தரவர்க்கக் குடும்பம் என்பது தெளிவாகிறது!)
அடுத்ததாக, பத்திரிக்கை கொடுத்தபின்னர் சிலர் அதனை பிரித்தும் பாராமல் அலட்சியமாக வாங்கி வைப்பது, கண்முன்னாலேயே பத்திரிக்கை மேலே போன் நம்பர்கள் எழுதுவது, பத்திரிக்கையை கையில் வாங்கி வைத்துக்கொண்டு கல்யாணத் தேதி, முகூர்த்த நேரம், மண்டபம் என்று கேள்வி மேல் கேள்விகள். சிலர் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ வரன் கிடைத்தால் சொல்லுமாறு ஜாதகப் பிரதி கொடுப்பது, டிவியில் தன் கவனத்தை வைத்துக் கொண்டு விளம்பர இடைவேளையில் வேண்டா வெறுப்பாகப் பேசி அனுப்பும் மனிதர்கள், தூக்கம் கெட்டது என எரிச்சலை முகத்தில் காண்பிப்பவர்கள், வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தராமல் தொ(ல்)லை பேசியில் அல்லது அலைபேசியில் பேசிக்கொண்டே இருப்பவர்கள், திருடர் பயத்தில் கதவையே திறக்கலாமா வேண்டாமா என்று யோசிப்பவர்கள்….உஸ்ஸ்ஸ்ஸ்…அப்பப்பா மனிதரில் எத்தனை நிறங்கள் என்று வாசகனையே அங்கலாய்க்கவைத்துவிடுகிறார் ஆசிரியர். வந்தவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீராவது தருபவர்கள் ஐந்து சதவிகிதமே என்று நொந்துகொள்ளச் செய்தும் விடுகிறார்.
இதற்கு இடையில் இரட்டைப் பெண்டாட்டிக்காரரின் வீட்டிற்கு அழைப்பு கொடுக்க சென்றபோது காணும் மூன்றாவது பெண்மணி யாரென்று கேள்விக்கு விடைகிடைக்காமல் திரும்புவது, ஆட்டோவுக்கு செய்யும் அதிகப்படியான செலவு, என்று அழைப்பு அனுபவங்கள் எல்லாவற்றையும் கோயிலில் நண்பரோடு பகிர்ந்துகொண்டு ஆறுதல் படுகிறார். அத்தோடு முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாகஅழைப்புகளை வினியோகிக்கும் வேலையைத் தொடர்கிறார்.
காலங்கள் மாறினாலும் சில விஷயங்கள் மாறுவதில்லை என்பதற்கு  நல்லுதாரணங்களாய், சந்தனம், கல்கண்டு கொடுத்து, பன்னீர் தெளித்து, பத்தாததற்கு ரோஜா மணத்தினை அளிக்கும் சென்ட் ஸ்ப்ரேயர் அமைத்து அருமையான வரவேற்பு அளிக்கப்படுகிறது.  திருமணத்திற்கு வருபவர்களுக்கு ஷோ ரூமே வரவேற்புதானே!

அடுத்ததாக விருந்து. திருமணத்திற்கு வருவோரில் பலரும் நேராக விருந்து நடைபெறும் இடத்திற்கே நேரடியாக சென்று விருந்தினை உண்டுவிட்டு அந்த வேலைமுடிந்ததும் நேரடியாக மணவறைக்குச் சென்று அன்பளிப்பினையோ அல்லது மொய்ப்பணத்தினையோ மணமகன்/மணமகள் கையில்கொடுக்கும்பொழுது, போட்டோ மற்றும் வீடியோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு நடையைக்கட்டும் நடைமுறையே இப்போதெல்லாம் காணப்படுகிறது.  மற்றசிலரோ, விருந்து முடிந்ததும், வேறு தெரிந்த நபர் எவர்கையிலாவது அன்பளிப்பினைக்கொடுத்து சேர்ப்பிக்கச்சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவதும் யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

சற்றே தூரத்து உறவினர்களில் ஆண்களென்றால், ஊர்வம்பிலோ அல்லது அரசியல் அரட்டையிலோ ஈடுபடுவதும், அதுவே பெண்களென்றால், நகைகள், மேட்சிங் ப்ளவுஸ், டிவி சீரியல், இதுகுறித்த பேச்சாக இருப்பதும் சுவைபடச் சித்தரிக்கப்பட்டுள்ளது.  இதனூடே மிகவும் தெரிந்ததுபோல் வணக்கம் சொல்லும் மனிதர்கள் குறித்த நகைச்சுவையான சித்தரிப்பும் உள்ளது!

       இதுவரை சரிதான், பத்திரிக்கை வைத்த பெரியவரிடம் விசாரித்துவிட்டு சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என்றால் அவர் எங்கே? சினிமாவில் கேமரா ஒவ்வொரு அறையாக தேடுவது மனக்கண்ணில் எழுகிறது.  ஆமாம்… அவர்தான் எங்கே?

 திருமண நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடக்கும் நேரத்தில் மணமகனின் அப்பாவை எங்கே எங்கே தேடியும் கிடைக்காமல் அவரது மனைவியிடம் ‘சார் எங்கே’ என்று கேட்கும்பொழுது கதை உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருப்பதை நம்மால் உணரமுடிகிறது. அப்பொழுது அவரது மனைவி வெளிப்படுத்தும் ‘எங்காத்து’ மனுஷா என்றாலே சற்று கம்மிதான் இவருக்கு – என்ற எண்ணக்கிடக்கை, திருமணமாகி எத்தனை வருடமானாலும் இந்த விஷயங்கள் அடிமனதில் ஒரு ஓரத்தில் ஓடிக்கொண்டிருப்பது கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது புன்னகையை வரவழைக்கிறது.

மணமேடைக்குப்பின் இருக்கும் மணமகன் அறையில்தான் அவர் இருக்கிறார் என்றறிந்து அங்கே சென்று பார்த்தால்….பெரிய்ய்ய்ய்ய பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கிறது!     மணமகனின் மாமா முகத்தைத்திருப்பிக்கொண்டு, முதுகைக்காட்டியபடி அமர்ந்திருக்கிறார்.  தாய்மாமனின் உரிமை, அவருக்குத் தரப்படவேண்டிய முக்கியத்துவம் குறைந்ததான எண்ணம் அவருக்கு ஏற்பட்டதால், அவர் வெளிப்படுத்தும் கோபத்தின் உச்சகட்டம், இவை எல்லாமே அவர் உட்கார்ந்திருக்கும் நிலையினைக்கொண்டே புரியவைப்பதான அற்புதக்காட்சி அமைப்பு! அருமை! இந்த உச்சகட்ட நிலைமையில் அடுத்து யார் என்ன செய்வது? வாசகனின் தலைக்கு மேலே பல கேள்விக்குறிகள்!

அந்த நேரத்தில்தான் கதைசொல்லியான இரண்டாவது கதாநாயகனின் நுழைவு.  நேரே மணமகனின் அப்பாவிடம் சென்று, ”என்ன ஸ்வாமி உம்மை எங்கேயுமே காணுமேன்னு தேடிண்டு இருக்கேன். இங்க என்ன பண்றேள்? ஆமாம் இந்த ஸார் யாரு?” என்கிறார்.

அதற்கு பதிலாக.
     ”இந்த ஸார் தான், என் மச்சினர். மும்பையிலிருந்து என்னுடன் சண்டை போட மட்டுமே, ப்ளேன் பிடித்து வந்திருக்கிறார்; நீரே நியாயத்தைச் சொல்லும்;  நானும், இவர் தங்கையும் இப்போது இருக்கும் உடம்பு நிலையில், மும்பைக்கு நேரில் இவர் வீட்டுக்குப்போய் பத்திரிக்கை கொடுத்து அழைத்து வர முடியுமா?  சொன்னால் புரிந்து கொள்ளாமல் மிகவும் கோபமாக இருக்கிறார். சுபகார்யங்கள் நல்லபடியாக அடுத்தடுத்து நடக்கணுமேன்னு எனக்கு ஒரே கவலையா இருக்கு” என்கிறார் மணமகனின் அப்பா.”

     ஒருசில வரி வசனங்களிலேயே, நிலவும் சூழ்நிலைக்கு என்ன காரணம் என்ற செய்தி மிகவும் அருமையாக சொல்லப்பட்டுவிடுகிறது. உறவினர்கள் எவராவது தலையிட்டால் சம்பந்தப்பட்ட மணமகனின் தாய் மாமன் எவ்வாறு சமாதானமடைவார்? அது மேலும் மேலும் ப்ரச்சனையை பெரிதாக்குமே தவிர சரிசெய்யமுடியுமா? இங்கேதான் வருகிறது கதையின் அதிமுக்கியத்திருப்பம்.

    மணமகனின் அப்பாவைப் பார்த்துக் கண்ணடித்தவாறே, “என்ன இருந்தாலும் சொந்த மச்சினர். மனைவியோடு கூடப்பிறந்த ஒரே அண்ணா. உம்ம பையனுக்கு, ஊஞ்சலுக்கு மாலை எடுத்துத் தரவேண்டிய சொந்தத் தாய் மாமா; அவர் சொல்வதில் என்ன தப்பு இருக்கு? இங்கே இருக்கிற மும்பைக்குப் போய் நேரில் அழைக்காமல் விட்டது நீர் செய்த மிகப்பெரிய தப்பு ஸ்வாமி ...... சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீரும் ...... நீர் செய்தது மிகவும் அயோக்யத்தனம்; மனசு இருந்தால் நீங்களும் மாமியும் ப்ளேன் பிடித்துப்போய் ஒரே நாளில் அழைத்து விட்டுத் திரும்பியிருக்கலாம். மும்பை என்ன, வெளிநாடா! பாஸ்போர்ட் விசா எல்லாம் வாங்கணுமேன்னு கவலைப்படுவதற்கு. ப்ளேன் ஏறினால் இங்கிருந்து ஒரு மணி நேரப்பயணம். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நானே உங்களுடன் மும்பை வரை துணைக்கு கூட வந்திருப்பேன்; நான் மட்டும் உங்கள் மச்சினராக, இந்த ஸாரோட நிலைமையில் இருந்திருந்தால், நடக்கிறதே வேறு; நேரில் வந்து அழைக்காத இந்தக் கல்யாணத்திற்கு வந்திருக்கவே மாட்டேன்;   ஏதோ இருந்து இருந்து இருப்பதே ஒரே ஒரு மறுமான் (மறுமான்=சகோதரியின் பிள்ளை) அவனுக்குக் கல்யாணம்; நாம் போய் கலந்து கொள்ளாவிட்டால் நன்றாக இருக்காது, என்று பெரிய மனசு பண்ணி, ஸார் வந்திருக்கிறார், தெரியுமா?” என்று சற்றே உரத்த குரலில் கூறி தாய்மாமனை முதலில் தன் கட்சியில் சேர்த்துக்கொள்கிறார் இரண்டாம் கதாநாயகரான கதை சொல்லி.

     மணமகனின் ‘தாய்’மாமனாக இருந்தபோதும், இவரே முன்னின்று அனைத்து வேலைகளையும் செய்யவேண்டிய நிலையில் இருந்தபோதும் ‘ஈகோ’ காரணமாக, அவரே செய்யவேண்டிய கடமைகளைக்கூட செய்யாமல் அனைவரின் கவனத்தையும் கவரும் விதமாக ‘முறுக்கி’க்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். இப்படித் தன்னையே ‘பெரும்’ஆளாக நினைத்துக்கொண்டு இடைஞ்சலாக இருப்பவரை எப்படி சரி செய்யலாம்? இங்கேதான் வெளிப்படுகிறது உண்மை நட்பு!  தாய் மாமன் எனும்‘பெரும்’ஆளை அந்த காக்கும் கடவுளான ‘பெருமாளாகவே’ மனதில் வரித்து காலில் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துமன்னித்தருளுமாறு நண்பருக்காக மன்னிப்புக் கேட்கிறார்.  (மணமகனின் தந்தை அல்ல, கதைசொல்லியே உண்மைக் கதாநாயகன் என்று இவ்விடத்தில் சொல்லாமல் சொல்கிறார்.) 


     அவ்வளவுதான்! சூழ்நிலையே தலைகீழாக மாறிவிடுகிறது.  கோபம் தணிந்த தாய் மாமன், ராமன் - விபீஷணனை கட்டி அணைப்பதுபோல கட்டியணைத்து நட்பாகி, திருமணத்தின் முக்கிய சடங்குகளில் ஒன்றான காசியாத்திரைக்கு தேவையானவற்றில் மூழ்கிவிட, பின்னர் ஒன்றொன்றாக திருமணச்சடங்குகள் எல்லாம் சிறப்பாகவே நடந்து முடிகிறது. முடிந்த கையோடு, மருமகனையும் அவன் மனைவியையும் தேன் நிலவுக்கு தனது ஊரான மும்பைக்கு வருமாறு ‘அழைப்பு’விடுக்கிறார். உடன்வர விருப்பம் தெரிவிக்கும் மைத்துனரை சீமந்தத்திற்கு  அழைப்பு’ கொடுக்க நேரில் (அப்பொழுதாவது) வருமாறும், அப்பொழுது நண்பரையும் (அங்கேயும் பஞ்சாயத்தா?!) உடன் அழைத்துவருமாறும்  அவருக்கும் சேர்த்து ‘அழைப்பு’ விடுக்கிறார்

    அனைவரின் வாழ்க்கையிலும் ‘அழைப்பு’கள் தொடரும் – இறுதியாக ஒரு அழைப்பு வரும் வரையிலும். கதாசிரியரே தன்னைத்தானே பாத்திரப்படுத்திக்கொண்டு, நட்பிற்கு உதாரணமாக - சிக்கல் வரும் வேளையில் அதனை சரிப்படுத்தி, கூடவே அற்புதமான (ஓவியர் கோபுலுவின் படங்கள் மற்றும் புகைப்படங்கள் மூலமாக) கல்யாணக் காட்சிகளை கண்முன்னே நிறுத்தி (பாலகுமாரன் மற்றும் ஆர்தர் ஹெய்லி ஆகிய எழுத்தாளர்களை ஒத்த காட்சி அமைப்புகளின் மூலம்), ‘ஹம் ஆப் கே ஹைன் கோன்’ ஹிந்தி திரைப்படத்தைப்போல ஒரு முழுமையான திருமணத்திற்கே சென்றுவந்த உணர்வினையும் ஏற்படுத்தி கதையை சுபமாக முடித்துவைக்கிறார்.


வாசகனை ஈர்த்து, இந்தக்கதையை படிக்க விருப்பம் ஏற்படுத்தி, சுபமான முடிவுடன் இந்தக் கதையை முடித்துவிட்டு தன் மற்றகதைகளையும் வாசகர்கள் படிக்கவேண்டும் என்ற மறைமுகமான ஆர்வத்தைத்தூண்டி கதாசிரியர் விடுக்கிறார் ஒரு மவுன ‘அழைப்பு